கும்கி 2 திரைப்பட வெளியீட்டுக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை:
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி 2 திரைப்படம் வெளியாகுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி 2 திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படவிருந்தது.
இந்நிலையில், சினிமா பைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயின் அவர்கள், கும்கி 2 திரைப்படத்தை தயாரிப்பதற்காக 2018ஆம் ஆண்டு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், அதை வட்டியுடன் திருப்பித் தருவதாக பிரபு சாலமன் ஒப்பந்தம் செய்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது வட்டி உடன் சேர்த்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதனால், கடனை திருப்பித் தராமல் திரைப்படத்தை வெளியிடுவது ஒப்பந்த மீறல் எனக் கூறி, கும்கி 2 வெளியீட்டை தடுக்க இடைக்கால தடை கோரி சந்திர பிரகாஷ் ஜெயின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், ஒப்பந்தத்தின் படி கடன் பாக்கி இருப்பதாகக் கூறி, நவம்பர் 14ஆம் தேதி வெளியீடாக இருந்த கும்கி 2 திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

