Dileep | கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மலையாளம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடித்து வந்த கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையை, கேரளாவில் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர செய்தது. கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி இரவில் பிரபல நடிகை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் சென்ற ஒரு கும்பல், நடிகையின் காரின் பின்புறத்தில் மோதினர். இதனால், காரை நிறுத்தி இருதரப்பும் வாக்குவாதம் செய்தபோது, வலுக்கட்டாயமாக நடிகையின் காருக்குள் அந்த கும்பல் நுழைந்தது.

அந்த கும்பலை வழிநடத்திய பல்சர் சுனில், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், நடிகையை பின்னாளில் மிரட்டுவதற்காக அதை செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இப்படி, திருச்சூர் – எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு அந்த நடிகை கும்பலிடம் சிக்கி தவித்ததாக FIRல் கூறப்பட்டது. சினிமா பாணியில் வன்கொடுமையை அரங்கேற்றிய அந்த கும்பல், இறுதியாக இயக்குநர் ஒருவரின் வீட்டின் முன்பு நடிகையை இறக்கிவிட்டு தப்பியது.

சம்பவம் நடந்த பின்னர் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து, அந்த நடிகை துணிச்சலுடன் காவல்துறையில் புகாரளித்தார். இதையடுத்து, அந்த நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில், சிறையில் இருந்தவாறு மலையாள நடிகர் திலீப்புக்கு, பல்சர் சுனில் எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கை முழுவதுமாக வேறு திசைக்கு திருப்பிய அந்த கடிதத்தால் மலையாள திரையுலகமே அதிர்ந்தது. இதன் பின்னர், நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தலில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக மலையாள நடிகைகள் உள்ளிட்டோர் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முறையிட்டனர்.

இதையடுத்து, வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. நடிகர் திலீப், இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் விசாரணை நடத்திய எஸ்ஐடி, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடிகர் திலீப்பை கைது செய்தது. நடிகர் திலீப்புக்கு எதிராக மலையாள திரையுலகில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அவர் வகித்த மலையாள திரைப்பட சங்க பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஏறத்தாழ 85 நாட்கள்
சிறைவாசத்திற்கு பின் நடிகர் திலீப் ஜாமீனில் வெளிவந்தார்.

எனினும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிபதி ஹனி வர்கீஸ்-ஐ வழக்கின் தனி நீதிபதியாக நியமித்து கேரள அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் நடிகர் திலீப்பை 8வது குற்றவாளியாக சேர்த்து சிறப்பு விசாரணை குழு புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கைதான விஷ்ணு உள்ளிட்ட இருவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறி வாக்குமூலம் அளித்தனர். ஏறத்தாழ 8 ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் நிறைவு பெற்றது. இந்நிலையில், திலீப் உள்ளிட்ட 10 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் இறுதி தீர்ப்பை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று வெளியிட்டார்.

வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த 6 பேரும் நடிகையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம், திலீப்பிற்கு குற்றத்தில் பங்கு இல்லை என்றும் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் அவருக்கு எதிராக குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *