தமிழ்நாடு பாழாகிவிடும் – வைகோ கடும் விமர்சனம்!
கட்சி நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொரட்டூரில் மதிமுக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் போதை பழக்கங்கள் அதிகமாகி உள்ளதாக பேசினார்.
தொடர்ந்து பேசிய வைகோ தமிழகத்தின் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு போதைப் பழக்கம் தான் காரணம் எனவும் தமிழ்நாட்டில் போதை பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு தமிழ்நாடு அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கஞ்சா விற்பனை செய்தால் 10 வருடம் சிறை விதித்து கடுமையான சட்டம் கொண்டு வந்து இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தெரிவித்தார். பண்பை வளர்த்து, உலகத்திற்கு அறிவுரை சொன்ன தமிழ்நாடு எதிர்காலத்தில் பாழாகி போய்விடும் எனவும் வைகோ கருத்து தெரிவித்தார்.

