திருநள்ளாறில் சோமவார சங்காபிஷேகம் – குவிந்த பக்தர்கள்!

திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நடைபெற்ற 1008 சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சோமவாரத்தை முன்னிட்டு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக விசேஷ ஹோமம் மற்றும் யாகமும் அதனை தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் 1008 வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்தனர். பின் கலசம் மற்றும் சங்குகளில் உள்ள புனித நீரினை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சிவனுக்கும், அம்பாளுக்கும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. சங்காபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *