ஆந்திரா பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திர பிரதேச மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. கடும் பனி மூட்டம் காரணமாக பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் உருண்டு நொறுங்கியது.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையை அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2,00,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து கொடுக்கப்படும் என பிரதமரின் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, விபத்து குறித்த தகவல் அறிந்து வேதனை அடைந்ததாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

