குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் செயல்முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என அரசியல் சாசன அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு தொடர்ந்த வழக்கில், முன்னதாக இரு நீதிபதிகள் அமர்வு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு மசோதாக்களை ஒப்புதல் அளிக்க 3 மாத காலக்கெடு நிர்ணயித்தது. மேலும், அரசியல் சாசனத்தின் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, சில மசோதாக்களுக்கு நேரடியாக உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு விளக்கம் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகளை பரிசீலித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதில்,
- மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் செயல்முறையில் காலக்கெடு நிர்ணயிப்பது நீதிமன்றத்தின் அதிகாரத்தில் வராது,
- பிரிவு 142-ஐ பயன்படுத்தி மசோதாக்களுக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளிப்பதும் இயலாது,
என்று அமர்வு ஒருமனதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய முந்தைய தீர்ப்பு அரசியல் சாசன அமர்வின் கருத்துக்கு முரணானது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
அதே நேரத்தில், மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை ஆளுநர்கள் நீண்ட காலம் நிலுவையில் வைக்க அதிகாரம் இல்லை என்றும், மாநிலத்தை இயக்கும் முதன்மை அமைப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அமைச்சரவை தான் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

