தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா – 48 வகை பொருட்களால் பெருவுடையாருக்கு பேரபிஷேகம்!
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா இன்று மிகுந்த ஆனந்தத்துடன், ஆன்மிக உற்சாகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பான நாளை முன்னிட்டு, காலை நேரத்தில் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) அவர்களுக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. விபூதி, தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பசும்பால், தயிர், மாதுளை முத்து, பிலாச்சுளை, அன்னாசி, திராட்சை போன்ற பல்வேறு பொருட்களுடன் சொர்ணாபிஷேகம் மற்றும் 108 ஸ்தாபன கலச அபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகத்திற்குப் பிறகு, வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசித்து மனமுருகி வழிபட்டனர்.
மாலை நேரத்தில், பெருவுடையார் – பெரியநாயகி அம்மன் திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா வருகின்றனர். மேலும், மாமன்னர் ராஜராஜ சோழன், பட்டத்தரசி லோகமாதேவி, மற்றும் ராஜேந்திரசோழன் திருமேனிகளும் தங்க கிரீடத்துடன் வீதி உலா வருவது பக்தர்களை மகிழ்விக்கிறது.
இந்த புனித விழா தஞ்சை நகரையே ஆன்மிக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

