அதிகாரிகளின் வீடுகளில் இருந்த ஆர்டர்லிகள் திரும்பப் பெறல்.
சென்னை: அதிகாரிகளின் வீடுகளில் பாதுகாப்பு மற்றும் தனிப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்டர்லி காவலர்கள் இனி அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக பொறுப்பு டிஜிபி அபய் குமார் சிங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அதிகாரிகளின் இல்லங்களில் நியமிக்கப்பட்டு தனிப்பணிகளை மேற்கொண்டு வந்த காவலர்கள், தங்களது முதன்மை காவல் பொறுப்புகளுக்கு மீண்டும் மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுப் பாதுகாப்பு மற்றும் துறை சார்ந்த முக்கிய பணிகளில் காவல் துறையின் மனிதவளத்தைச் சிறப்பாக பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திரும்பப் பெறப்படும் காவலர்களை பொது ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் அவசர பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையில் உள்ள மனிதவளத்தைச் சீர்மையான முறையில் பயன்படுத்தி, மக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

