இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்: பெயர் இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?
SIR பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் (EPIC) அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும்.
அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
மேலும் விவரங்களுக்கு (view details) என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய விவரங்கள் அனைத்தும் ஒரு தனி திரையில் திறக்கும்.
அதில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களுடன் வாக்குச்சாவடி அதிகாரி, வாக்குச்சாவடி அலுவலர் ஆகியோரின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் இருக்கும். இந்த பக்கத்தை நீங்கள் பிடிஎப் வடிவில் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
வாக்குச்சாவடி அலுவலரிடம் நீங்கள் எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிக் கொடுத்திருந்தால் உங்களுடைய பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். நீங்கள் படிவம் நிரப்பிக் கொடுத்தும் பட்டியலில் பெயர் இல்லை என்றால் இந்த ஆவணத்தைக் கொண்டு வாக்குச்சாவடி அலுவலரை அணுகலாம்.
ஒருவேளை படிவம் நிரப்பிக் கொடுக்கவில்லை என்றால் புதிய வாக்காளராக சேர்வதற்கு வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 6 -யைப் பெற்று உரிய ஆவணங்களுடன் அதனை நிரப்பிக் கொடுக்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் மாற்றம் இருந்தாலோ இன்று (டிசம்பர் 19) முதல் 2026 ஜனவரி 18 ஆம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலரைத் தொடர்பு கொண்டு மாற்றங்களை மேற்கொள்ளலாம். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்

