காருக்குள் எடுக்க எடுக்க வந்த மதுபாட்டில்கள் !
புதுச்சேரியிலிருந்து கார் என்ஜின் பேனட்டுக்குள் மறைத்து கடத்திவரப்பட்ட விலை உயர்ந்த மது பாட்டில்கள் கள்ளக்குறிச்சியில் சிக்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விஜய் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த புதுச்சேரி பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது, இஞ்ஜின் பேனட்டுக்குள் மறைத்து விலை உயர்ந்த 150 மது பாட்டில்கள் கடத்திவந்தது தெரியவந்தது.
இதையடுத்து மது பாட்டில்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட புதுச்சேரியைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இருவரை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து நாள்தோறும் நூதனமான முறைகளில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

