பிரபல நடிகரும் நடிகையும் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!


தீபாவளிக்கு தனது டீசல் திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து படைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்ட ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இந்த நிலையில் அவரது புதிய திரைப்படமான ‘டீசல்’ தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை அதுல்யா ரவி, இயக்குனர் சண்முக முத்துசாமி ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று காலையில் சாமி தரிசனம் செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி ‘டீசல்’ படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையார் கோவிலில் சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்து கொடி மரத்துக்கு முன்பாக வணங்கினர். பின்னர், திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு மாலைகள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் கல்யாண், தீபாவளிக்கு தான் நடித்த டீசல் திரைப்படம் வெளியாவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கண்டிப்பாக இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் இந்த படத்தில் முக்கியமான கருத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.