பழனி – திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
பழனியில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்குச் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 6ஆம் கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குழந்தை வேலாயுத சுவாமி கருவறை விமானம், ராஜகோபுர கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மூலவர் குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

