இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த எம்எல்ஏ சந்திர பிரியங்கா

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் குடும்பங்களை கோட்டிச்சேரி தொகுதி எம்எல்ஏ சந்திர பிரியங்கா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

காரைக்கால் கோட்டிச்சேரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவராமனுக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 17 மீனவர்கள் இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு, அதே பகுதியில் பத்து நாட்களுக்கு முன்பும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சந்தித்த எம்எல்ஏ சந்திர பிரியங்கா, “மீனவர்களை அப்படியே விட்டுவிட்டு எங்களால் நிம்மதியாக இருக்க முடியாது. அவர்கள் விடுவிக்கப்படும் வரை போராடுவோம்” என ஆறுதல் கூறினார்.

அவரை கட்டிப்பிடித்து கதறி அழுத மீனவப் பெண்கள், “எங்கள் கணவர்களையும் படகையும் மீட்டுத் தருங்கள்” எனக் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திர பிரியங்கா, “இது குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மீனவர்களையும் அவர்களின் படகையும் மீட்க வேண்டும்” எனக் கோரினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *