தந்தையை கொன்றவரை 3 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த மகன்!

புதுச்சேரி ஏனாம் பகுதியில் தந்தையை கொன்றவரை 3 ஆண்டுகளாக காத்திருந்து பழி தீர்த்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏனாம் பகுதியைச் சேர்ந்த திபிரி செட்டி நாராயணசாமி (35) என்பவர் நேற்று இரவு திரையரங்கம் அருகே மர்ம நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஏனாம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணையில், 2022ஆம் ஆண்டு நாராயணசாமி, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்த மேக வெங்கடேசராவை பணம் திருப்பி தராத விவகாரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. அந்த வழக்கில் சிறையில் இருந்த நாராயணசாமி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
இந்த நிலையில், கொல்லப்பட்ட வெங்கடேசராவின் மகன் மொக்க ஆனந்த், தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்கும் நோக்கில் 3 ஆண்டுகளாக காத்திருந்து நாராயணசாமியை கத்தியால் வெட்டி கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.