புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு – சிபிஎம், திமுக, விசிகவினர் கலைவாணனுடன் IPS சந்திப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் பேராசிரியர் மாதவய்யா மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் மாணவர்களை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலை கண்டித்து, சிபிஎம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இன்று காலை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் IPS அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும், பாலியல் புகார்கள் தொடர்பாக நியாயமான விசாரணை நடைபெற உள்புகார் குழு (Internal Complaints Committee) அமைக்க பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்துமாறு கோரினர்.
மேலும், எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது காவலர்கள் நெறிப்படுத்தப்பட்ட முறையில் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பில் சிபிஐஎம் செயலாளர் இராமசந்திரன், திமுக மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், வழக்கறிஞர் ரெமி எட்வின், விசிகவினர் அரிமா தமிழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.