மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி – 100க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

புதுச்சேரி : அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, 100க்கும் மேற்பட்ட தனியார் செவிலியர் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
“புற்றுநோயை விட நம்பிக்கை பெரியது, பெண்களின் வலிமை அதைவிட பெரியது, ஒவ்வொரு பெண்ணும் விழிப்புணர்வுடன் இருக்கட்டும், புற்றுநோய் இல்லா உலகம் நமது ஆகட்டும்” போன்ற வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகளை கையில் ஏந்தியும், முகத்தில் பிங்க் நிற வர்ணம் பூசியும் மாணவ, மாணவிகள் புதுச்சேரி முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியின் மூலம் பெண்களில் மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம் என்ற செய்தி பொதுமக்களிடம் பரவலாக எடுத்துரைக்கப்பட்டது.