பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூரவே நடத்திக் காண்பித்தவர் என்றும் ஹைட்ரஜன் பாம் போட்டாலும் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “திமுகவின் இந்து எதிர்ப்பு பிரச்சனையினால் நாங்கள் கலாச்சாரப் போரில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கீழடி பொறுத்தவரை நாங்கள் தமிழர்களின் தொன்மையை மறைப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் தொன்மையை வெளிக் கொண்டு வருவதற்கு அதிக நிதி கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. நாங்கள் கோட்டைக்கு செல்லும்போது இரட்டை இலை யுடன் தாமரை மலரும். கலாச்சார போரை நிலை நிறுத்துவோம். திமுக மக்களுக்கு எதிர்ப்பாக இருக்கிறது. நாங்கள் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதற்கு உதாரணம் ஜிஎஸ்டி” என தெரிவித்தார்.
வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். ஹைட்ரஜன் பாம் போடுகிறேன் என்று சொல்கிறார்கள். பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூரவே நடத்திக் காண்பித்தவர். எந்த ஹைட்ரஜன் பாம் போட்டாலும் மோடி வெற்றி பெறுவார்” என்றார்.