புதிய சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு – சுயேட்சை எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கைது

புதுச்சேரியின் பாகூர் பகுதியிலுள்ள சேலியமேடு கிராமத்தில் புதிய சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் – புதுச்சேரி – நாகப்பட்டினம் நான்குவழிச் சாலையில், புதுச்சேரியின் பாகூர் பகுதியிலுள்ள சேலியமேடு கிராமத்தில் புதிய சுங்கச்சாவடி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், இரு மாநில மக்களின் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து காரைக்கால் தெற்கு தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், “ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையே குறைந்தபட்சம் 50 முதல் 60 கி.மீ தூரம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், சேலியமேட்டில் அமையவுள்ள சுங்கச்சாவடி, மதகடிப்பட்டியில் உள்ள கெங்காரம்பாளையம் சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் மட்டுமே அமைந்துள்ளது. இது விதிமுறைகளுக்கு எதிரானது.
இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால், வாகன ஓட்டிகள், உள்ளூர் மக்கள், விவசாயிகள் ஆகியோர் அதிக சுங்கக் கட்டணத்தைச் செலுத்த நேரிடும். ஏற்கெனவே வாகனங்கள் வாங்கும்போதே சாலை வரிகளை செலுத்திவிட்ட நிலையில், மீண்டும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றி வைப்பதாகும்.
புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைந்தால் இரு மாநில மக்களின் தடையற்ற போக்குவரத்து சுதந்திரம் பறிக்கப்படும்.
விதிகளை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால், பொதுமக்களைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும். எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி, இரு மாநில மக்களின் போக்குவரத்து உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது நேரு தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் நேரு மற்றும் அவரது ஆதரவாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.