காவலர்கள் நினைவு தினம் – புதுவை முதல்வர் ரங்கசாமி மரியாதை!
புதுவையில் கொட்டும் மழையில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மழையில் நனைந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புதுவையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கொட்டும் மழையில் நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மழையில் நனைந்தபடி பணியின் போது உயிர் நீத்த காவலர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்,
இதேபோல் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காவல்துறை தலைவர் ஷாலினி சிங், டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் காவலர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மூன்று சுற்றுகள் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பணியின் போது உயிரிழத்த காவலர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

