குத்தாலம் அற்புத குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழா கோலாகலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அற்புத குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழா ஜனவரி 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து எட்டு நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி மற்றும் அலங்கார திருத்தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதைமுன்னிட்டு அற்புத குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை சேவியர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தொடர்ந்து, அற்புத குழந்தை இயேசு உருவம் தாங்கிய அலங்கார தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இன்னிசை முழங்க, வானவேடிக்கையுடன் தொடங்கிய தேர்பவனி குத்தாலம் கடைவீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

