கோவை மாவட்டம் வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி உயிரிழப்பு!

வால்பாறை அருகே யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது தோட்டத் தொழிலாளி அசலா என்பவரின் வீடு யானையால் இடிக்கப்பட்டது.
வீடு இடிக்கும் சத்தத்தை கேட்டு அசலா தனது ஆறு வயது பேத்தி ஹேமா ஸ்ரீயை தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றார். அப்போது காட்டு யானை இருவரையும் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் சிறுமி ஹேமா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தீவிரமாக காயமடைந்த அசலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி, பேத்தி உயிரிழந்த இந்த துயரச்சம்பவம் வால்பாறை பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.