ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத பொங்கல் விழா
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள நைனார்மடம் கிராமத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள வெல்லந்தாங்கி அய்யனார் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட பொங்கல் வைக்கும் விநோத திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதுப்பானையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின் குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து வெல்லந்தாங்கி அய்யனார் கோவில் அருகில் பொங்கல் வைத்தனர். இதனை தொடர்ந்து, படையில் இட்டு அதனை ஆண்கள் மட்டுமே உண்டனர்.
இதுகுறித்து அப்பகுதியினர், இந்த வழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களது விவசாயம் மட்டுமல்லாது கால்நடைகள் மற்றும் தலைமுறைகளும் தழைத்தோங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த நேரத்தில் பெண்கள் அனைவரும் வெளியில் வராமல் வீட்டில் இருப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

