பகலில் பெயிண்டர் – இரவில் வாழை திருடன்! புதுச்சேரி போலீசாரின் சோதனையில் சிக்கினார்
புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தனது தோட்டத்தில் அடிக்கடி வாழைத்தார் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் செட்டிபட்டு, சோம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் இருந்து வாழைத்தார்கள் அடிக்கடி திருடப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வாழைத்தார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாகன ஓட்டியை கைது செய்து விசாரித்ததில், அவர் மணவெளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என தெரியவந்தது.
விசாரணையில் பகலில் பெயிண்டர் வேலை செய்து வந்த வெங்கடேசன், மாலை நேரங்களில் விவசாய தோட்டங்களில் சுற்றிப்பார்த்து, இரவில் வாழைத்தார்களை அறுத்து அதிகாலை மார்க்கெட்டில் பாதி விலையில் விற்று வந்தது தெரியவந்தது.
அதில் கிடைத்த பணத்தில் புதிய உடைகள், இருசக்கர வாகனம், செல்போன் வாங்கியதோடு, மது குடித்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

