புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் 23ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 17 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் 17 இடங்களில் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வரும் 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன.
வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 26ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. புதுச்சேரி மாநிலம் முழுவதும் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் பணிகளில் 4,934 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு பணிக்காக 5,410 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

