கவனத்தை ஈர்த்த அதிமுகவினர்! சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நாள்தோறும் அவை நடவடிக்கைகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையின் உள்ளே வரும்போது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பேட்ஜ் ஒன்றை சட்டையில் அணிந்து வந்தனர். கடந்த சில கூட்டத்தொடர்களில் அதிமுகவினர் அணிந்து வந்த பேட்ஜ்கள் அனைவராலும் பேசப்பட்ட நிலையில் இன்று ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கிட்னி திருட்டு சம்பவங்கள் அரங்கேறியதாகவும் திமுக எம்.எல்.ஏ. ஒருவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்ததாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இதுகுறித்து அரசு தரப்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதனை குறிப்பிடும் வகையில் அதிமுகவினர் இன்று சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
