வக்பு திருத்த மசோதா: தடை விதிக்க மறுப்பு; முக்கிய விதிகளுக்கு இடைக்கால தடை

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த மசோதாவிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், முக்கிய விதிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடந்த 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா-2024 ஆகிய இரண்டும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரசு தலையிடுவதாகவும், அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கான யுத்தி இது’ என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பின.

மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது கூட, மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதேபோல், மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்.பிக்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக. விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி, “வக்பு சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து 38 கூட்டங்களை நடத்தி 98.2 லட்சம் கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது. அதன்பிறகே நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு, தனிப்பட்ட குடிமக்கள் உரிமை பற்றி முடிவெடுக்க, மாவட்ட ஆட்சியரை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வக்பு நிலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் தரும் விதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், வக்பு வாரியத்திற்கு சொத்துகளை அளிப்போர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என வக்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள பிரிவுக்கு தடை விதித்துள்ளது. மத்திய வக்பு வாரியத்தில் 4 இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக் கூடாது, அதே சமயம் மாநில வக்பு வாரியத்தில் 3 இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *