முதலமைச்சரை சந்தித்த நடிகை…
‘தெறி’, ‘கத்தி’, ‘மெர்சல்’ என மூன்று படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சமந்தா. அவர் தனது ‘எங்கள் தங்கம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்காக சென்னை வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்துள்ளார்.
முதல்வரை சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
“இன்று நான் சென்னையில் தரையிறங்கியபோது, எனக்குள் ஓர் எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் நம்முடைய முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன். விஜய் சார் எப்போதுமே திரையில் மட்டும் கதாநாயகனாக இருக்க வேண்டியவர் இல்லை என்று நான் நினைப்பதுண்டு.
அவருடைய ஆற்றல், அவருடைய ஆளுமை மற்றும் மக்கள் அவர்மீது காட்டும் அன்பு ஆகிய அனைத்தும், அவர் இதைவிடப் பெரிய ஏதோ ஒன்றிற்காகவே உருவாக்கப்பட்டவர் என்பதை உணர்த்தியுள்ளன.
எல்லாவற்றையும்விட அவரிடம் அதிகமாக ஈர்ப்பது எதுவென்றால், ஒரு புதிய களத்தில் கால்பதிப்பதற்குத் தேவைப்படும் அந்தத் துணிச்சல்தான். ஏற்கெனவே நாம் சாதித்து, முத்திரை பதித்த ஒரு துறையை விட்டுவிட்டு, சவால்களும் பொறுப்புகளும் மிக அதிகமாக உள்ள ஒரு புதிய களத்தைக் கையில் எடுப்பது சாதாரண விஷயமல்ல. அது எளிதானது என்பதால் அல்ல; மாறாக, நம்மால் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையினால்தான் அவர் அதைச் செய்கிறார்.
நம் எல்லோருடைய வாழ்க்கையிலும், ஏதோ ஒரு காலகட்டத்தில், நாம் இன்னும் அதிகமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். நம்மைத் தாண்டி, இந்தச் சமூகத்திற்கு நம்மால் என்ன பங்களிப்பைத் தர முடியும் என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ளும் தருணம் அது.
ஆனால், மிகச் சிலரே அந்த அழைப்பிற்குச் செவிசாய்த்து செயலில் இறங்குகிறார்கள். ஏற்கெனவே விஜய் சார் மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருப்பவர்களை அவர் இன்னும் ஆச்சர்யப்படுத்துவார் என்ற ஓர் எண்ணம் எனக்குள் இருக்கிறது. அவர் இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கத் தேவையான வலிமையும், ஞானமும், துணிச்சலும் அவருக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்.
மேலும், இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வோர் இளைஞருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் ஆரம்பத்தில் கண்ட கனவைவிட, உங்கள் வாழ்க்கை மிகப் பிரமாண்டமானதாக மாறக்கூடும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

