அமைச்சரவைக் கூட்டம் நிறைவு…சட்டமன்ற கூட்டத் தொடர் ஜூன் 18-ல் !
ஆளுநர் உரையுடன் ஜூன் 18ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் என சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் தெரிவித்துளள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற, தவெக தலைமையிலான தமிழக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, இந்தக் கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், 436 திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் லஞ்சம் இல்லாத ஆட்சி மற்றும் போதையில்லா தமிழகம் உருவாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு முதலமைச்சர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை, நிதி நிலைமை மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் சட்டப்பேரவை சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் ஆளுநர் உரையுடன் , “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2026-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 18-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு. சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அச்சமயம் தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.

