உலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி பெருமிதம்
உலகிலேயே பழமையான மற்றும் செழுமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 129-வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார்.
குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள மக்கள் தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் மீது பெரும் ஈர்ப்பு காட்டி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் உலகளவில் பாராட்டப்படுகின்றன என்றும், இளம் தலைமுறையினர் தமிழ் மொழியை கற்றறிய முன்வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கருத்துகள், தமிழ் மொழியின் பெருமையை தேசிய அளவில் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

