“என்ன பேசினார்னு தெரியாம தீர்ப்பு சொல்லாதீங்க”.. ஜெய்ஸ்வாலின் கமெண்ட் வைரல்!
இலங்கை வீரர் அசிதா பெர்னாண்டோவுடனான மோதல் தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதம் நீடித்து வரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது வெளியிட்டுள்ள கருத்து மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
கொலம்போவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 45 ரன்களில் ஆட்டமிழந்தபோது, அசிதா பெர்னாண்டோவுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், சக வீரர்கள் தலையிட்டு பிரித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்பஸ் வெளியிட்ட “ஜெய்ஸ்வால் வரம்பு மீறிவிட்டாரா?” என்ற வீடியோவுக்கு ஜெய்ஸ்வால் நேரடியாக கமெண்ட் செய்துள்ளார்.
அதில், “அவர் என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், தயவுசெய்து தீர்ப்பு வழங்காதீர்கள்” என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் வரம்பு மீறினால் இந்தியா எதிர்த்து நின்று பதிலளிக்கும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜெய்ஸ்வாலின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
2 வீரர்களுக்கும் அபராதம்
மோதல் தொடர்பாக ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோ இருவரும் தங்களது தவறுகளை ஒப்புக்கொண்ட நிலையில், இருவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் மற்றும் தலா ஒரு தகுதிக்குறைப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

