தீப்தி சர்மாவின் தரமான சம்பவம் 171 விக்கெட்டுகளுடன் புதிய வரலாறு!

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை தீப்தி சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, ஹாங்காங்-சீனா மற்றும் இந்தோனேசியா என 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஆசியக் கோப்பை தொடர் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியா – தாய்லாந்து அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சபாலி வெர்மா அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 64 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் நந்தினி சர்மா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் தீப்தி சர்மா 1.1 ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரன்கள் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார்.

மேலும், இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். 170 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த தாய்லாந்து வீராங்கனையை பின்னுக்குத் தள்ளி, 171 விக்கெட்டுகளுடன் தீப்தி சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *