தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு! பொன்னி முதல் பாசுமதி வரை புதிய விலை நிலவரம்
பருவமழை பற்றாக்குறை மற்றும் அண்டை மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் அரிசி விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிசி விலை உயர்வு பொதுமக்களின் குடும்ப பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்?
தமிழ்நாட்டின் ஆண்டு அரிசி தேவை சுமார் 95 லட்சம் டன் எனக் கூறப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி போக, ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் டன் வரை வெளிமாநிலங்களில் இருந்து அரிசி வரத்தை தமிழ்நாடு நம்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிற்கான அரிசி வரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
எந்த அரிசி எவ்வளவு உயர்வு?
26 கிலோ பொன்னி சன்ன ரக அரிசி மூட்டை முன்பு ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,800 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் ரூ.69 ஆக உள்ளது.
சாதாரண சன்ன ரக அரிசி மூட்டை ரூ.1,200-ல் இருந்து ரூ.1,600 ஆக உயர்ந்துள்ளது.
25 கிலோ பிராண்டு பொன்னி அரிசி முன்பு ரூ.1,250 முதல் ரூ.1,450 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,450 முதல் ரூ.1,550 வரை விற்பனை செய்யப்படுகிறது.
30 கிலோ பாசுமதி அரிசி மூட்டை ரூ.1,450 முதல் ரூ.2,500 வரை இருந்த நிலையில், தற்போது ரூ.1,950 முதல் ரூ.3,000 வரை உயர்ந்துள்ளது.
அதேபோல், 30 கிலோ சீரக சம்பா அரிசி மூட்டை ரூ.4,900-ல் இருந்து ரூ.5,400 ஆக அதிகரித்துள்ளது.
எப்போது விலை குறையும்?
வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கணிப்புப்படி, வரும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகே புதிய நெல் விளைச்சல் சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய விளைச்சல் சந்தைக்கு வந்த பிறகே அரிசி விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தற்போதைய விலை உயர்வு தொடர்ந்தால், பொதுமக்களின் குடும்ப பட்ஜெட்டில் கூடுதல் சுமை ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

