‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப தணிக்கை வாரியம் கடந்த 5ஆம் தேதி பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து படத்தை தயாரித்த கே.வி. புரொடக்ஷன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவர் உத்தரவை ரத்து செய்து, படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

