அரசு விழாவில் தவெக எம்எல்ஏ புறக்கணிப்பு – மேயர் விளக்கம்!
சென்னையில் நடந்த இரு வேறு பள்ளிக் கட்டடத் திறப்பு விழாக்களில் தவெகவின் திரு. வி.க.நகர் எம்.எல்.ஏ பல்லவி மற்றும் திமுக மேயர் பிரியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இன்று சென்னை புளியந்தோப்பில் உள்ள உருது நடுநிலைப்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, இந்த விழாவின் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியின்போது, மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ பல்லவியிடம் தராமல், அங்கிருந்த ஐஏஎஸ் அதிகாரியிடம் மேயர் பிரியா நேரடியாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த எம்.எல்.ஏ பல்லவி அங்கிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து, நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழாவில் மேயர் பிரியா அவராகவே முன்வந்து மெழுகுவர்த்தியை நீட்டி விளக்கேற்ற அழைத்தபோது, எம்எல்ஏ பல்லவி அதை வாங்க மறுத்துவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினார். இவ்விரு சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் “பள்ளியின் கட்டிட திறப்பு விழாவிற்கு என்னை அழைத்து இருந்தார்கள். கல்வி சார்ந்தது என்பதால் நான் சென்றிருந்தேன். அங்கு சென்றதும் என்னை அவமரியாதை செய்யும் வகையில் மேயர் பிரியா நடந்து கொண்டார்” என செய்தியாளர்களின் சந்திப்பின் போது எம்.எல்.ஏ பல்லவி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு விளக்கமளித்துள்ள மேயர் பிரியா,”குத்து விளக்கு ஏற்றும் நிகழ்வின் போது, நெறிமுறைப்படி மேயராக முதலில் நான் குத்து விளக்கு ஏற்றினேன். பிறகு, ஐஏஎஸ் அதிகாரிகள் ஏற்ற வேண்டும்; அதன் பிறகு தான், எம்.எல்.ஏ-கள் ஏற்ற வேண்டும். அதை தான் பின்பற்றினோம். யாரும் அவரை அவதூறாக பேசவில்லை; அவரே வெளியே சென்று விட்டார். வேண்டுமென்றே பிரச்னை செய்ய வேண்டும் என நினைப்பவர்களை என்ன செய்ய முடியும். எம்.எல்.ஏ-வை நாங்கள் அவமதிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

