ஒரு பைசா செய்கூலி! தங்க மோதிரம் திட்ட டெண்டரை தட்டித் தூக்கிய ஜாய் ஆலுக்காஸ்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்திற்காக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்க தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது.
இதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளியை சமர்ப்பித்தன. ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து மற்றும் BIS தரமுத்திரை உள்ளிட்ட அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து வெறும் 1 பைசா என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியை வழங்கியது.
இதையடுத்து, பிற நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளிக்கு இசைவு தெரிவிக்குமாறு கோரப்பட்ட நிலையில், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் அதற்கு ஒப்புதல் தெரிவித்தது.
இதனால், தங்க மோதிரம் வழங்கும் பணியில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70% மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு 30% என்ற அடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தொடங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

