சௌகார் ஜானகி: 7 தசாப்தங்களை கடந்த கலைப்பயணம் நிறைவு!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கதாநாயகி, குணச்சித்திர நடிகை, நகைச்சுவை நடிகை என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
சிறுவயதிலேயே வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது குரல் மற்றும் பேச்சுத் திறமையால் கவனம் ஈர்த்தார். பின்னர் இயக்குநர் பி.என். ரெட்டியின் வாயிலாக திரைத்துறைக்குள் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு, 1950ஆம் ஆண்டு வெளியான ‘Shavukaru’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தின் பெயரே பின்னாளில் அவரது பெயருடன் இணைந்து ‘சௌகார் ஜானகி’ என்ற அடையாளமாக நிலைத்தது.
தமிழ் சினிமாவில் 1952ஆம் ஆண்டு வெளியான ‘வளையாபதி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து ‘பாலும் பழமும்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘புதிய பறவை’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘பணம் படைத்தவன்’ உள்ளிட்ட பல முக்கியமான படங்களில் நடித்தார்.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தனது நடிப்பை மாற்றிக்கொள்ளும் திறமை கொண்ட சௌகார் ஜானகி, ‘தில்லுமுல்லு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவையிலும் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தினார். நடிகையாக மட்டுமின்றி ‘காவியத் தலைவி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார்.

சினிமாவைத் தாண்டி நாடகத்திலும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவர் சௌகார் ஜானகி. வானொலி, நாடகம், சினிமா என பல்வேறு தளங்களில் தனது கலைத்திறனை வெளிப்படுத்திய அவர், பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த சௌகார் ஜானகி, பின்னர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அடுத்த தலைமுறை நட்சத்திரங்களுடனும் பணியாற்றினார்.
அவரது நீண்டகால கலைப்பணியைப் பாராட்டி கலைமாமணி, பல்வேறு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
பல தசாப்தங்களைத் தாண்டி திரைத்துறையில் தொடர்ந்து பயணித்த சௌகார் ஜானகி, தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அரிய கலைஞராக திகழ்ந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே பேரிழப்பாக அமைந்துள்ளது.

