கூட்டணியில் அதிர்ச்சி முடிவு : தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க..!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் தவெக தலைமையில் இன்னொரு அணி, நாம் தமிழர் கட்சி தனித்து என தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவ இருக்கிறது.
ஆரம்பத்தில் திமுக கூட்டணியில் பேச்சு வார்த்தை நடத்திய தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும், 1 ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு அதிமுக கூட்டணியிலும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியதால்,திமுக தலைமை அதிருப்தி அடைந்தது.
அதனால், திமுக கூட்டணியா, அதிமுக கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தேமுதிக, கடைசியில் இன்று (வியாழக்கிழமை) திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.
இதன்மூலம் 20 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், நீண்ட நாள் அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

