‘ஹிட் மேன்’ மீண்டும் ஹிட்… சதத்தால் ஃபார்முக்கு திரும்பிய ரோகித் சர்மா!
இந்திய கிரிக்கெட்டின் ‘ஹிட் மேன்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். மேலும், இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களின் பட்டியலிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித், அடுத்த ஒருநாள் உலகக்கோப்பையை இலக்காகக் கொண்டு தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா எதிர்பார்த்த அளவில் ரன்கள் குவிக்காததால், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம், விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.
ஆனால், அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அபார சதம் விளாசி தனது பேட்டால் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

