“விந்தணுப்பையை விற்றால் ரூ.1.2 கோடி” Instagram Reels-ஐ நம்பிய கும்பல்.. 17 வயசு சிறுவன் ப*
போபால்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வெளியான தகவலை உண்மை என நம்பி, 17 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபாலைச் சேர்ந்த ரேஹன் என்ற 17 வயது சிறுவன், மசூதி மற்றும் தர்கா உள்ளிட்ட இடங்களில் பேனா, சாவி கொத்துகளை விற்று தனது குடும்பத்திற்கு உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், உடலின் சில உறுப்புகளை விற்பனை செய்தால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வெளியான தகவலை பிபிஏ மாணவரான ஜோஹெப் கான் என்பவர் நம்பியதாக கூறப்படுகிறது. தான் ஒரு மருத்துவர் என நண்பர்களிடம் கூறிய அவர், இந்த தகவலை அவர்களிடமும் பகிர்ந்துள்ளார்.
இதனை நம்பிய கும்பல், கடந்த 6-ம் தேதி ரேஹனை ரூ.100 தருவதாகக் கூறி தனியாக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அங்கு அவரது தலையின் பின்புறத்தில் தாக்கியதுடன், கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சிறுவனின் உடலில் இருந்து உறுப்பை அகற்றி அதனை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். அப்போதுதான், உறுப்புகளை விற்பனை செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதும், அதனை வாங்குவதற்கு யாரும் இல்லை என்பதும் அவர்களுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, ரேஹனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ரேஹன் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தன்னை மருத்துவர் என கூறிய ஜோஹெப் கான், ஆமீர் குரேஷி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி, சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் போபாலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

